Sunday, May 23, 2010

குறையொன்றுமில்லை...

"வாழ்த்துக்கள் ...பெண் குழந்தை " - தாய், தந்தை இருவருக்கும், உள்ளிற்குள் இனம் புரியா ஆனந்தம்."ஆசைக்குப் பொண்ணு " என்று சொல்வதுண்டு. உண்மை தான் போலும். குறையொன்றுமில்லை.

அவள் அம்மாவின் அரவணைப்பில் உலகை நோக்கினாள். அனைத்துமே சுகமாய், அமைதியாய் இருந்தது. அவ்வயதில், நல்லது கெட்டது ஆராயத் தெரியுமா என்ன? வீட்டில் அவளே செல்லம் ஆனாள். குறையொன்றுமில்லை.

பள்ளி முதல் நாள். அப்பா அழைத்துச் சென்று விட்ட பின், வகுப்பிற்குள் தனியாக நுழைந்தாள். உலகத்தை யார் துணையும் இல்லாமல், தனியாக எதிர் கொண்டதாய் ஓர் பெருமிதம். குறையொன்றுமில்லை.

ஒவ்வோர் வகுப்பையும் கடந்து மெல்ல முன்னேற்றம் கொண்டாள். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. சீராகவே சென்றது. திடீரென, தனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். ஆண், பெண் வேறுபாடு இது வரை உணரவில்லை. ஆனால் இப்போது அதுவே கண் முன் இருந்தது. ஏன் அப்படி? கேள்வி தனக்குள் மட்டுமே. தாயிடம் கேட்டால், மௌனமே பதிலாய் வந்தது. ஆம். பெண்மையின் வெளிப்பாடு. திகிலாய் உள்ளே தோன்றினும், அதுவே நிரந்தரம் என்பதால்,பழக்கம் கொண்டாள். குறையொன்றுமில்லை தான்.

மாற்றம், தனக்குள் மட்டுமில்லை. தன்னைக் காணும் உலகத்தின் பார்வையிலும் தான். முன்பு வீட்டில் காட்டிய செல்லம், தற்போது செல்லமாகத் தோன்றவில்லை. தடையாகவே தோன்றியது. தனியாகச் செல்ல அனுமதி இல்லை என்பதைக் காட்டிலும், பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. Ruchika போன்ற நிகழ்வுகள் செய்திகளில் வருகிறதே. தன் வயதை ஒத்த ஆண் பிள்ளைகள் இவ்விதக் குழப்பம் கொள்ளவில்லையே. கடவுளே
இதற்கு வித்திட்டாரோ? உலகம் தோண்றிய காலம் முதல் இப்படித் தான் போலும். அவ்விதமே அவளைச் சுற்றி இருந்த சமூகம் நம்ப வைத்தது. ஏற்றுக் கொண்டாள். இதைக் காரணமாய்க் கொண்டு, மனதில் நினைப்பதைச் செய்ய, அனுபவிக்க, ஐயம் கொண்டாள். பெண் என்றால் செய்யக் கூடியது , செய்யக் கூடாதது என இருக்கின்றன போலும். வாழ்க்கையில் மேலும் நிறைய உள்ளது. இதைத் தவரவிடின் குடி மூழ்கிப் போவதில்லை என சமாதானம் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

தன் பெயருக்குப் பின்னால், பட்டம் பெற்றாள். ஆணிற்குப் பெண் சமம் உண்மையாகி விட்டது. தானும் வேலைக்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி. தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலே இருந்த
அத்துணை குழப்பங்களும் தொடர்ந்தன தான். ஆனால், இவ்வொரு விஷயமே அனைத்தையும் ஆட்கொண்டன.அட. சமூகம் அப்படித் தான்..குறை ஒன்றுமில்லை


திருமண வயது. அப்பப்பா... எவ்வளவு ஆசையுடன் செய்கிறார்கள் பெற்றோர். எவ்வளவு நகை, சாமான், ஆரவாரம். அனைத்தும் தன் மேல் கொண்ட பாசத்தினால் தானே.
உற்சாகம் கொள்ளும் அதே நேரத்தில், கேள்விகளும் அதிகரித்ததே தவிர, குறையவில்லை. ஏன் இவ்வளவு ஆடம்பரமும் மணமகள் வீட்டார் மட்டும் செய்ய வேண்டும்? என்ன பயன்? ஏன் நான் என் வீட்டாரை விட்டுச் செல்ல வேண்டும்? நான் விற்கப் படுகிறேனா? அல்ல, மாப்பிள்ளை வாங்கப் படுகிறாரா? ஏன் இது இப்படியாக இருக்கிறது? புரியவில்லை தான். கேள்விகள், அவளைத் தாண்டி நகர்ந்தால், பதில் "அது அப்படித் தான்" . ஒத்துக் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான் மா...குறையொன்றுமில்லை.

புகுந்த வீடு சென்ற பின், அவளும் வேலைக்குச் சென்றாள். அவள் கணவனும் சென்றான். ஆயினும்,
வீட்டு வேலை செய்வது, அவளாகவே இருந்தது. ஏன்? சமூகமே அப்படித் தான். சரி தான். அப்படியானால், அதைத் தவிர , குறையொன்றுமில்லை.


பெண் வாழ்கையின் தவப்பலன். தாயானாள். சுற்றம் முழுவதும் அவளைக் கொண்டாடியது. தாங்க மாட்டா வலி கொண்டாள். இறந்து விடுவோமோ என அஞ்சும் அளவு வலி, துக்கம். குழந்தை பிறந்தது. பிறந்த பலனை அடைந்து விட்டாயிற்று. இது வரை மனதில் எழுந்த கேள்விகள் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்தன. இந்த ஒரு தாய்மை
உணர்விற்காகத் தான், இத்தனை தடைகளுமா அவளுக்கு? இதை அறிந்து தான், சமூகம் இவ்வளவு கோட்பாடுகளை வைத்துள்ளதா? அப்படியானால், குறையொன்றுமில்லை.

மீண்டும் அவள் பணி - வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்ந்தது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பும் உடன் சேர்ந்தது. தற்போது, இரண்டு வித வாழ்க்கை அவள் முன். அவை இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய அவளுக்கு சுதந்திரம் இருந்தது. ஒன்று, வேலையை விட்டு, வீட்டில் இருந்து அனைத்தையும் கவனிக்க வேண்டும். இல்லையேல், வீடு, அலுவல் என இரண்டையும் சமாளிக்க வேண்டும். அச்சோ. இரண்டிலுமே, வீட்டை கவனிக்கும் பொறுப்பு பெண்ணிற்குத் தானா? குழந்தை வளர்ப்பில் பெண் மட்டும் தான் ஈடுபட வேண்டுமா? அது ஏன்? பெண்ணால் மட்டுமே பொறுப்பாய், பாச மிகுதியாய் இருக்க முடியும். உண்மை தான் போலும். சமூகம் கூறினால், உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

அவள் மனதினுள் அவள் காணும் வெளி உலகத்திற்காய் , அவள் ஆசைப்பட்டவை என ஏதேனும் செய்ய நினைத்தால், நேரம் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. சமூகம் அதை ஒரு பொருட்டாய்க் கொள்ளவில்லை. அவளும் தான். ஆகையால், குறை ஏதும் உள்ளதென நினைக்கவில்லை.

சுமங்கலியாய் சென்று விட வேண்டும் என அனைவரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறாள். உணர்ந்தாள், கணவர் சென்ற பின். கணவர் வருவதற்கு முன்னமே, பூ, பொட்டு எல்லாம் வைத்திருந்தாள் . ஆயினும், இப்போது அது அவளிடம் இருக்கக் கூடாது என சுற்றம் கூறியது. எதிர் கேள்வி கேட்க மனம் இல்லை. அவள் இருப்பதையே, அமங்கலமாய்க் கருதியது. இது ஏன் பெண்ணிற்கு மட்டும் இப்படி? சும்மா இரு. சமூகம் அப்படித் தான். குறை ஒன்றும் இருக்கக் கூடாது.


இவை அனைத்தும் இருப்பினும், அவளிடம் சமூகம் கூறியது "இனிய மகளிர் தினம் " .

அது சரி. சமூகம் என்பது யாரானால் ஆனது? தானும் தானே என்பதை உணரும் சமயம், வாழ்க்கை அவள் கையில் இல்லை.

6 comments:

  1. nicely written :) we must become the change we want to see !

    ReplyDelete
  2. Enjoyed reading it.

    But could not help but observe that the content was one-dimensional :).

    Still, could not agree more with the way you ended it. Nicely done!!

    ReplyDelete
  3. பெண்ணையும் சமூகத்தையும் உங்கள் மனதில் உள்ள குமுறல்களையும் நன்கு தெளிவாக கூறி உள்ளீர்கள்..

    ReplyDelete