Sunday, May 23, 2010

வெற்றிடம்

"டேய்... நேத்து ஸ்கூல் சீக்கரமே முடிஞ்சிதா? வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் என்ன பண்றது நு தெரியாம பக்கத்துல இருந்த மைதானத்துக்கு போலாம் னு தோணிச்சு. அம்மா கிட்ட சொன்னேன். அம்மாவும் சரி னு சொல்லிட்டாங்க. எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்ல டா"

"போனியா?"

"ஆமாம். போனோமே. அங்க குட்டி பசங்க விளையாட நிறைய இருக்கு. அம்மா கைய பிடிச்சி போனேன். சறுக்கு மரம் மட்டுமே நிறைய கலர் ல இருந்துது. எல்லாமே ஒரே மாதிரி தான். ஆனா எல்லாத்துலயும் மாறி மாறி குதிச்சிட்டு இருந்தேன். "

"சறுக்கு மரம் மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா அங்க?"

"ஏன் இல்ல? ஊஞ்சல் இருந்துது. அதுல நான் ஏறி உக்காந்தேன். அம்மாக்கு அத பாத்து ரொம்ப சந்தோஷம். பின்னாடி நின்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் மேல போய்ட்டு திரும்ப கீழ வரும் போது, பொறுமையா திரும்ப ஏத்தி விட்டாங்க. செம ஸ்பீடா தள்ளி விட்டாங்க. எனக்கு காத்துல மிதக்கறா மாதிரியே இருந்துது. "

"வேற என்ன விளையாடின? நீ சொல்ல சொல்ல எனக்கும் அப்டி எல்லாம் விளையாடனும் னு ஆசையா இருக்கு டா. ஆனா எப்போ, யார் கூட்டிட்டு போவாங்க னு தெரியலையே. நானும் எங்க அம்மா வ கேட்டு பாக்கறேன் ஒரு வாட்டி "

"சீசா இருந்துது டா. அதுவும் சூப்பர் தெரியுமா? நான் ஒரு பக்கம் உக்கார, அம்மா இன்னொரு பக்கம், கைய வெச்சி பேலன்ஸ் பண்ணாங்க... அது விளையாடும் போது, பக்கத்துல ஒரு தாத்தா "பலூன் பலூன்" னு கூவிட்டே போனாரு. அத பாத்த உடனே, விளையாட பிடிக்கல. பலூன் வாங்கணும் னு தோணிச்சு. அம்மா வ பாக்க மட்டும் தான் செஞ்சேன். வாய தெறந்து கேக்கவே இல்ல. அம்மா உடனே தாத்தா வ கூப்பிட்டு பலூன் வாங்கி தந்தாங்க. "

"என்ன கலர் பலூன்? எவ்ளோ பெரிசு?"

"ப்ளூ கலர். செம பெரிசு. அத தூக்கி போட்டு விளையாட ஆரம்பிச்சிட்டேன். "

" பலூன் தாத்தா முகம் ஞாபகம் இருக்கா?"

"இருக்கே. "

"பலூன் கலர் ஞாபகம் இருக்கு. தாத்தா முகம் ஞாபகம் இருக்கு. என்ன விளையாடின னு எல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா, உன்னை இங்க ஆசிரமம் ல விட்டுட்டுப் போன உங்க அம்மா முகம் மட்டும் எப்படி இருந்துது னு ஞாபகம் இல்லையா?"

"என்னை கேக்கற? நீயும் தான் அடிக்கடி உங்க அம்மா வ பாக்கற? முகம் ஞாபகம் இருக்கா என்ன? "

"அது சரி டா. நாம எல்லாத்தையும் கனவுலேயே பாக்கறோம். என்னிக்கு தான் நேர்ல பாத்து விளையாட போறோமோ. "

இருவரும் மற்றும் ஓர் கனவை எதிர்பார்த்து உறங்க முயற்சித்தனர்.

1 comment: