Monday, April 9, 2012

If Only

வாரயிறுதியில் If only என்ற ஆங்கில படம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.பழைய படம் தான்.ஹீரோவிடம் அதிகம் எதிர்பார்ப்புகள் கொண்ட ஹீரோயின்.அதை நிறைவேற்ற முடியாமல் தவிக்கும் ஹீரோ என அதிக நேரம் வாக்குவாதத்தில் முடிக்கும் ஜோடி.தன் சொந்த ஊருக்கு செல்லும் ஹீரோயின் ஹீரொவையும் உடன் அழைக்கிறாள்.வேலைக் காரணத்தால் செல்ல முடியாத ஹீரோ என மனஸ்தாபத்தில் முடிகிறது.ஹீரோவின் ஒரு கனவில் ஒரு நாள் நடக்கவிருக்கும் சம்பவம் அனைத்தும் நிழலாய் செல்கிறது.ஹீரோயின், விபத்தில் உயிர் பிறிவதும் அவளது டைரியை ஹீரோ படித்து தனிமையில் அழுவதுமாய்க் கனவு முடிகிறது.அதிர்ச்சியில் கண் விழிக்கும் ஹீரோ,அடுத்த நாள் காலை கனவில் நடந்த அனைத்தும் நிஜத்தில் நடப்பதை எண்ணி பதற்றம் கொள்கிறான்.அப்படியெனில் அன்றிரவு அவள் இறப்பாள் என்பதை ஏற்க முடியாத ஹீரோ, ஹீரோயினை காப்பாத்த முயல்கிறான்.இருப்பினும் அவளுடனான நாள் இறுதி நாளாக இருக்கும் என்ற அச்சத்தில் அவள் ஆசைப்பட்ட அனைத்தையும் உடன் நின்று செய்கிறான்.அவள் செல்ல விரும்பிய இடங்கள்,அவன் சொல்லி அவள் கேட்க விரும்பியவை என அனைத்தும் நிறைவேற்றுகிறான்.இறுதியில் அவளைக் காப்பாற்றினாரா ஹீரோ என்பதே க்ளைமாக்ஸ்.அதிகம் சென்டிமென்ட்ஸ்,நிதானமாகவே கதை நகர்கிறது.

இந்த படம் பிடித்ததா என்பதை விட சொல்லப்பட்ட கருத்து மனதிற்கு நெருக்கமானது.அதனாலே இந்தப் பதிவு எனலாம்.டைம் - மனிதனின் அப்பாற்பட்ட சக்திக்கு அவனிட்ட எளிய பெயர்.கண் இமைக்கும் நேரம் ஒரு நொடி என்று அறிவோம். ஆனால் அந்த ஒரு நொடி நமக்காக சுமந்து வரும் ஆச்சரியங்களை உணரும் சமயம், நேரம் கையிலெட்டா தூரத்தில் பறந்து விடுகிறது. இதில் உறவுகளின் விருப்பு வெறுப்புகளை எளிதில் நேரத்துடனே சேர்த்து தொலைத்தும் விடுகிறோம்.ஒரு நண்பன்.எப்போதும் உடனிருப்பவன் தான்.என்றாவது அவன் ஏதோ பேச முயற்சி செய்கையில் வேலை மும்முரத்தில் பெரிதாய் எடுக்காமல் புறக்கணித்து முன்னே செல்கிறோம்.நாம் பேச நினைக்கும் சமயம் அவன் உடனில்லை என்றால் எப்படி எடுப்போம்.அவன் என்ன சொல்ல நினைத்தான் என்பதை உணரும்முன்னே அவன் பிரிந்து விடுகிறான். அவன் பேச விரும்பிய சமயம் காது கொடுத்திருந்தால் ஒரு வேளை அவன் உடனிருந்திருப்பானோ . தெரிய வாய்ப்பில்லை.

படத்தில் இருந்ததைப் போல்,ட்ரெயிலருடன் வாழ்க்கை நடக்கவிருப்பதை நமக்கு விளக்குவதில்லை.தொலைத்த நொடிகள் திரும்பவும் வருவதில்லை.அடுத்த நாள் நாமோ,நமக்கு நெருக்கமானவர்களோ உலகில் எந்த மூலையில் இருப்போம் என்பது நேரம் மட்டுமே அறிந்த ரகசியம்.அலைப்பேசி,இணையம் என உலகம் சுருங்கி விட்டதாய் பொய் சமாதானம் சொல்லி உடனிருக்கும் உறவுகளை மறைத்தும் மறந்தும் வாழ்கிறோம்.அருகில் இருப்பவரை உதாசீனப்படுத்தி,தொலைவில் சென்றபின் மிஸ் யூ எனச் சொல்லி உறவின் பெருமையை பேசுவதில் என்ன சாதிக்கிறோம்.உறவின் அர்த்தத்தை உணர்கிறோமேயன்றி அதன் ஆழத்தை வாழ மறக்கிறோம்.

என்றோ, எப்போதோ எடுத்த போட்டோ ஆல்பம் பார்க்கையில், அதிலிருக்கும் சிலர் நம்மிடையே இருப்பதில்லை என்பதை வருந்துவோர் உண்டு. ஆனால், அந்த மனிதர் உடன் இருந்த சமயம், அவரிடம் சரியாகப் பழகினோமா என்பதை நினைப்பதுமில்லை. அதை வேறொருவருக்கு செய்கிறோமா என்று யோசித்து மாறுவதுமில்லை. போட்டி, முன்னேற்றமென டைம் மிஷினைத் தோற்கடிக்கும் மிஷின்களாய் வாழ்க்கையை புலம்பல்களிடையே நகர்த்திக் கொண்டிருக்கிறோம்.இறுதியில் எதை அடைகிறோமோ இல்லையோ, இழந்தவை மட்டும் மனதை வாட்டும் என்பதில் ஐயமில்லை.

Life is all about moments and memories. Moments are to be lived to have a life filled with Memories! Just Live it! :)

Thursday, October 27, 2011

புன்னகைப் பூவே

கடவுளை என்றாவது யாராவது உணர்ந்ததுண்டா? இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்! முடியக் கூடியதும் இல்லை. சுற்றி நடக்கும், அநியாயங்களும், உளைச்சல்களும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியையும், மழை,கடல்,இயற்கை என அனைத்தும் எல்லையை மீறிய ஒரு சக்தியையும் மாறி மாறி உணர்த்திக் கொண்டே இருக்கும்!

அது ஒரு புறம் இருப்பினும், கடவுளை உணர்ந்த நொடிகள் என்று பல உண்டு. ஒரு புன்னகை, சிறு துளி கண்ணீர், முகமலர்ச்சி, கோபம்,நன்றி,மன்னிப்பு என பலவற்றை தினமும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் மட்டும், அதே புன்னகை,கண்ணீர் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணலாம்! அத்தகைய மனதிற்கு நெருக்கமான தருணங்களை என்னவென்று விவரிப்பது!

அன்று, மிகுந்த குழப்பமான மனநிலையில் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். ப்ளேயரில் இளையராஜா பாடிக் கொண்டிருந்தாலும், மனக்குழப்பத்தில் மட்டும் மாற்றமில்லை! எங்கே நடக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லை!

திடீரென எதிரே முதுகில் பையை மாட்டிக் கொண்டு ஒரு சிறு பெண் வழி மறித்து நின்றாள். கையை சல்யுட் போல நெற்றியில் வைத்தவாறே, "அக்கா. எங்க பாத்து நடக்கறீங்க? குட் ஈவினீங்" என்றாள் முகம் நிறைய புன்னகையுடன்! என்னிடம் தான் பேசுகிறாளா? இவளை முன்னமே பார்த்திருக்கிறேனா? எதற்கு என்னை நிறுத்தினாள்? ஏன் என்னிடம், அவள் பேசினாள்? தினம் செல்லும் வழி தானே. கபடமில்லா சிரிப்பும், குட் ஈவினிங் வாழ்த்தும் ஏன் என் மீது அன்று வீசுகிறாள் ? அந்த புன்னகை, என் இதய ஆழமுள் வரை சென்று,ஏன் உற்சாகத்தை பரப்பியது? பதிலுக்கு கூட அவள் காத்திருக்கவில்லை.நகர்ந்து நடந்து கொண்டே இருந்தாள். சில கணங்கள் என்ன பதில் அளிக்க வேண்டும் என்று அறியாமல் அங்கேயே நின்ற நான், திரும்பி "ஓய். குட் ஈவினிங்" என்றேன் கை அசைத்தவாறு. புன்னகை மட்டுமே பதில் அளித்து மறைந்தாள் இருட்டில்!

அவள் முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. புன்னகை தந்த நொடிகள் மட்டும் நிறைந்திருக்கிறது நினைவுகளில். இந்த தருணம் என்ன உணர்த்தியது எனக்கு? அன்பு தான் கடவுளா? அன்பின் வழியே கடவுள் வெளிப்படுகிறாரா? ஒரு சிறு புன்னகை கூட மனதை இப்படி மாற்றுவதன் அதிசயமும் ரகசியமும் என்ன! அனைத்து கேள்விகளும் எழுந்தாலும், பதில் தேவையிருக்கவில்லை! நான் தான் மீண்டும் புதியதாய் பிறந்தது போல், பாடிக் கொண்டு நடந்தேனே தொடர்ந்து! எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற தெளிவு பிறந்தது ஆச்சரியமே! நீங்களும் இத்தகைய மனதை விட்டு அகலா தருணங்கள் வாழ்ந்துள்ளீர்கள் தானே!

Thursday, October 20, 2011

பிரிந்தும் பிரியாமலும்-1

வாரயிறுதிகள் வீணாய்க் கழிவதை விரும்பாமல் தான்,நண்பர்களுடன், அந்த இல்லம் போக ஆரம்பித்தேன்.பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வியிலும், மனதளவிலும் உறுதுணையாய், முடிந்த உதவியை செய்திட ஒன்றிணைந்தோம்.புதிய அனுபவம் கண் முன் உனக்காகவே காத்திருக்கிறேன் என்று வரவேற்றது!

முதல்
நாள். எங்களின் முன் குறைந்தது நாற்பது மாணவர்கள்! எதற்காக நாங்கள் அவர்களை சந்திக்கிறோம் என்ற குழப்பம் அவர்களிடம். இவர்களுக்காக என்ன செய்யப் போகிறோம் என்ற கேள்வி எங்களிடம்!ஆர்வம் மட்டுமே துணையாய்!

இது வரை, யாரோ என்றிருந்தவர்கள் இனிமேல், அக்கா - தம்பி, அண்ணா- தம்பி என்ற உறவுகளாய் இணையப் போகிறோம். எளிதில் எங்களிடம் பேசி விடுவார்களா? புதியவர்களிடம், தயக்கம் இருந்திடாதா?அதை தகர்த்தெறிவது எங்களின் பொறுப்பு தானே. விளையாட்டைத் தவிர வேறு வழி இருக்குமா உறவுப் பாலத்தை உறுதியாக்கிட. தொடர்ந்து சில வாரங்கள், அவர்களுடன் விளையாட்டு மட்டுமே என்று ஆரம்பித்தோம்.

இதோ எனது வாழ்க்கை பயணத்தில், புதிதாய் பல அரும்புகள் ஒரே சமயத்தில். உற்சாகமா,நிறைவா விளக்க முடியவில்லை.வாழ்ந்தேன் அந்த நொடிகளை என்பது மட்டும் நிச்சயம்.

ஒவ்வொரு விளையாட்டும் மெல்ல அவர்களை அறிமுகப் படுத்தியது.விருப்பங்கள், ஆசைகள், ஏக்கங்கள் என அனைத்தும் உணர ஆரம்பித்தோம். அத்தகைய ஒரு விளையாட்டின் போது தான், அவனின் அறிமுகம் எனக்கு. பெயர் முதலில் மனதில் நிற்கவில்லை தான். ஆனால் பார்க்கும் போதெல்லாம் புன்னகை வீசிட மட்டும் தவறவில்லை. நினைவை விட்டு அகலவுமில்லை. அன்றிலிருந்து அவனிடம் தனி கவனம் என்னையறியாமல் சென்றது. அனைத்து விளையாட்டிலும் சுற்றி இருந்த பல மாணவர்களின் நடுவிலும், அவன் எங்கு உள்ளான் என்று தேட ஆரம்பித்தேன். அவனும் பார்த்து முகம் மலர்ந்தான்.

எல்லோரும் அக்கா என்று பாசத்துடன் அழைத்த சமயம், இவன் மட்டும் "சங்கீதா அக்கா" என்று எனது பேரயும் இணைத்தான். நெருக்கம் அதிகமாய் உணர்ந்தேன். இதோ கிடைத்து விட்டான் ஒரு அன்புத் தம்பி , ஆனந்தம் எனக்குள்.

கவிதைப் போட்டி வைத்த ஒரு நாள்."வாழ்க்கையின் குறிக்கோள்" என்ற தலைப்பில். எல்லோரும், மிலிட்டரியில் சேர வேண்டும், நாட்டிற்கு செய்ய வேண்டியவை என பட்டியலிட்டுக் கொண்டிருந்த வேளையில், இவன் மட்டும் மாறுபட்டான். என் வாழ்க்கையில், கேளாமலே நடந்திட்ட பலவும், அவனின் விருப்பங்களாய் நீண்டு கொண்டிருந்தது. சம்பாதித்து, குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும் என்பது மட்டுமே அடிப்படை,ஆயினும் மனதில் ஆழமாய் பதிந்திட்ட குறிக்கோளாய் அவனுள். ரசிக்க வைத்தான், யதார்த்த ஆசையை.

ஒரு சமயம்,கலை மற்றும் விளையாட்டு நிகழ்சிக்காக, அவர்களை அழைத்துச் செல்லும் பொறுப்பை ஏற்றேன். அதிகாலை நான் சென்ற சமயம், உற்சாகமாய் என்னுடன் கிளம்பிட அனைவரும். எங்களை அழைத்துச் செல்லும் பேருந்து மட்டும் இன்னும் காணவில்லை. வருத்தம் தான். அதிலும் ஒரு நன்மையே. அவர்களுடன் உரையாடி மகிழ அதை விட சிறந்த சமயம் கிடைத்திருக்காது. முடிவில்லா கேள்விகள் அவர்களிடம். முடிந்த வரை பதில் அளித்திட நான் அவர்கள் முன்.

"அக்கா. பஸ் எப்போ வரும்?" என்ற கேள்வி தொடர்ச்சியாய் இருந்தாலும், பல உண்மைகளை உணர்த்திட்ட கேள்விகளும், பதில்களும் இருந்தன. நம் அன்புத் தம்பி அருகில் அமர்ந்தேன்.

"அக்கா. என்ன பண்ணுறீங்க?" அவனே ஆரம்பித்தான் உரையாடலை.

"சாப்ட்வேர் இஞ்சினீயர்" என்றேன்.

"அப்படியா? எவ்வளோ அக்கா சம்பளம் இருக்கும்?" அடுத்த கேள்வியும் தம்பியே.
இதற்கு என்ன பதில் சொல்லுவேன் என்று யோசித்த சமயம், இன்னொருவன் கூறினான் "40000 இருக்கும்டா". சிரித்தேன். தம்பியை கவனித்தேன். "அப்படியா அக்கா?" என்ற ஆச்சரியம்.

"எதுக்கு கேக்கற" என்றேன்.

"இல்ல அக்கா. நானும் உங்கள மாதிரி சம்பாதிக்கணும்"

"கண்டிப்பா சம்பாதிப்படா" . புன்னகையுடன் ஆமோதித்தான்.

"அதோ தெரியுதே. அந்த காலேஜ்ல படிச்சா போதும் அக்கா"

"ம்ம்ம்"

"ஆமா.இப்போ எவ்வளோ தூரம் போகணும்?"

"கொஞ்ச நேரம் தான்டா ஆகும். இருபது நிமிஷம்"

"ம்ம்ம்.எங்கயும் நாங்க வெளில போகவே முடியாதுக்கா"

"இன்னிக்கு கூட்டிட்டு போறேனே. நல்லா ஜாலியா இருங்க"

"அது மட்டுமென்ன, ஒரு பெரிய மைதானம். அவ்வளோ தான?"

"ஆமா.ஆனால் யாரும் உங்களை கேள்வி கேக்க மாட்டாங்க"

"நான் வெளில போய் இருக்கேன். பக்கத்து தெருல குப்பைத்தொட்டில குப்பை கொட்டிட்டு வர. அத தாண்டி போனதில்லை" என்றான் வேறொருவன்

"நான் அது கூட போனதில்ல அக்கா" என்றான் தம்பி.

"ஆமா. உங்க வாத்தியார் பத்தி சொல்லுடா" பதில் தெரியாத நேரங்களில், இன்னொரு கேள்வியே பதிலாய்.

அவனும் கண்டிப்பான சார் யாரென்றும், பரிவுடன் பழகும் சார் பத்தியும் பேச ஆரம்பித்தான், வகுப்பறை அனுபவங்களை. எல்லோரும் சேர்ந்து கொண்டனர்.காலை எழுந்ததிலிருந்து,இரவு தூங்கும் வரை,அவர்களின் தினசரி செயல்கள்,வாழ்க்கை முறை என அனைத்தும் அறிந்தேன். பேச்சை மாற்றிய பெருமிதம் என்னிடம். நிலைக்கவில்லை.

இடையில் கேள்வியுடன் ஒருவன் குறுக்கிட்டான். "அக்கா. பீச் போய் இருக்கீங்களா? IPL மேட்ச் ஸ்டேடியம்ல பாத்து இருக்கீங்களா"

மறுக்க முடியவில்லை. "பாத்திருக்கேன்டா. ஒரு நாள் உங்கள கூட்டிட்டு போறேன்"

ஏதோ யோசித்துக் கொண்டிருந்த தம்பி "சங்கீதா அக்கா, நீங்க பண்ணுறதுக்கு பேர் என்ன? சோஷியல் சர்வீசா?" என்றான். யாரோ தலையில் கொட்டுவதைப் போல் உணர்ந்தேன். இதற்குப் பெயர் சோஷியல் சர்வீஸ் இல்லையே. எனது சுயநலம் தானே அதிகம் இருந்தது. இவர்களின் புன்னகை வழியே எனது புன்னகையையும்,மன நிம்மதியையும் தானே எதிர்பார்க்கிறேன்.நாம் செய்யும் எந்த செயலிலும்,கூறும் எந்த ஒரு வார்த்தையிலும் எவ்வளவு சுயநலம் ஒளிந்துள்ளது.

"அதெல்லாம் இல்லடா. எனக்கு சனி,ஞாயிறுல எதுவும் அவ்வளவா வேலை இல்லை. அதான் உங்க கூட வந்து பேசலாம்ன்னு இருக்கேன்"

என் பதிலை அவன் எதிர்பார்த்து கேள்வி கேட்டானா என்று தெரியவில்லை.முந்தைய ஆண்டு, இதே மாதிரி அவர்கள் போட்டியில் பங்கேற்று பெற்ற பரிசுகள் பற்றி உற்சாகமாய் உரையாட ஆரம்பித்தனர். அவன் இந்த வருடமும் எப்படியாவது சாம்பியன்ஷிப் தங்களுக்கு தான் என்று அங்கேயே தீர்மானம் நிறைவேற்றினர். தம்பியும், அன்றைய தினம்,அவன் பங்கேற்கவிருக்கும் விளையாட்டு, நடனப் போட்டி பற்றி விவரித்தான். "நீங்க அங்க தான இருப்பீங்க அக்கா. கண்டிப்பா வந்து பாக்கணும்." அன்புக் கட்டளை தம்பியிடமிருந்து. பேருந்து வந்தடைந்தது.

தொடரும்...

Thursday, June 10, 2010

கரையைத் தேடி...

சமீபத்தில் தான் வீடு மாறி இருந்தார்கள். விலாசம் மாற்ற வேண்டியதில் ஏதோ ஒரு குழப்பம். அதனால் வங்கி வரை நேரில் செல்ல வேண்டிய கட்டாயம் அவளுக்கு. ஒன்றரை வயது மகளையும் உடன் அழைத்துச் சென்றிருந்தாள்.

பெரிய படிப்பு இல்லையெனினும் நன்றாகப் படித்தவள் தான். வீட்டோடு இருந்தால் தான், குழந்தை வளர்ப்பில் முழு கவனம் செலுத்த முடியும் என்பது அவள் கணவனின் விருப்பம். ஒப்புக் கொண்டு தான் மணம் முடித்தாள்.ஆயினும்,
அவ்வப்போது, வேலைக்குச் செல்லும் பெண்களைக் காண்கையில், மனதில் ஒரு வித நெருடல் வரும். அவர்கள் நம்பிக்கையுடன் எதையும் அணுகும் திறன் தன்னிடம் குறைவாகவே இருப்பதாய் உணர்வாள். வீட்டில் இருப்பதால் தான், வேலை பளு அதிகம் தன் மேல் விழுவதாய்க் கூட சில சமயம் தனக்குள் நொந்து கொள்வாள்.

அந்த எண்ணம் இன்றும் , பெண் மேலதிகாரியிடம் உரையாடிக் கொண்டிருக்கையில் இவளை ஆக்ரமித்துக் கொண்டிருந்தது. இடையிடையே தன் மகள் பேச நினைக்கும் புரியா வார்த்தைகளுக்கு பதில் அளிப்பதுமாய் இருந்தாள்.

விலாசம் மாற்ற வேண்டி ஒரு கடிதம் எழுதிக் கொண்டிருந்த அதே சமயம், இவளின் முழு கவனமும், அந்தப் பெண் அதிகாரியின் மீதே. தன் கீழ் வேலை செய்பவர்களிடம் செலுத்தும் கண்டிப்பு, வாடிக்கையாளர்களிடம், நேரிலோ, தொலைபேசியிலோ, அமைதியாய், புன்முறுவலுடன் பதில் அளிக்கும் முறை என அனைத்தும், இவளைப் பொறாமை கொள்ளவே செய்தது. தானும் அப்படி ஒரு நிலைமையில், இருக்கக் கூடாதா என. இதே எண்ணங்களுடன் வங்கியை விட்டு தன்னையே மறந்தவளாய்க் குழந்தையுடன் வெளி ஏறினாள்.

இவள் இறங்குவதையே பார்த்துக் கொண்டிருந்த, அதிகாரியின் கண்களில் ஏக்கமும் பொறாமையும். பெற்றோரின் நினைப்பில் அவ்வதிகாரியின் குழந்தையும் "டே கேர்" மையத்தில். இவள் தன் பிஞ்சின் மழலையை, மடியில் அமர்த்தி மகிழ்வது எப்போது.

Sunday, May 23, 2010

உதிராச் சருகுகள்

கொடைக்கானல் பிரயன்ட் பூங்கா. மாலை நேரம். மலர்க் கண்காட்சி என்பதால் கூட்டத்திற்குப் பஞ்சம் இல்லை. எண்ணற்ற கண்கள் பூக்களை ஆச்சர்யத்துடன் நோக்கிக் கொண்டிருக்கையில், நான்கு கண்கள் மட்டும், கூட்டம் அதிகமில்லா இடத்தைத் தேடின. இவர்களுக்கெனத் தவம் கொண்டதாய் ஒரு மரம் கரங்கள் நீட்டி அழைத்தது. அம்மரத்தின் அருகே 3 குழந்தைகள் மட்டுமே பந்து விளையாடிக் கொண்டிருந்தன. பேசிக் கொள்ளவில்லை. இருவர் கால்களும் தானாய் அம்மரத்தை நோக்கி ஒரு சேர நடந்தன. அகன்ற புன்னகை இருவர் முகத்திலும். ஆயினும், அவர்கள் உள்ளங்களில் பரவிய ஆனந்தத்தை, விளக்க முயன்று தோற்றுப் போயின முகங்கள் என்பதே உண்மை.

இருவரும், புல் மீது அமர்ந்த உடனே, சுற்றும் முற்றும் இருந்தவர்கள் செய்வதை எல்லாம் பார்த்தனர். மனதினுள் ஆயிரம் ஓட்டங்கள். குழந்தையை ஒத்த மனநிலையில் இருவரும். இறுதியாக, ஒருவரை ஒருவர் நோக்கினர். ஆரம்பிக்கலாமா என இருவர் விழிகளும் வினவியது. ஆகட்டும் என்று அதே விழிகள் பதிலும் அளித்தன. உடனே, அவன் சட்டைப் பையினுள் கை விட்டு, வெளியே எடுத்தான் மோதிரத்தை. புன்னகை இருவரை விட்டு, அன்று முழுவதும் விலகுவதில்லை என முடிவெடுத்திருந்தது. அதற்காகவே காத்திருந்தவள் போல், கையை நீட்டினாள், அவன் பெருமிதத்துடன் அணிவித்தான். மிருதுவாய் முத்தமிட்டாள், அம்மோதிரத்தை. அவன் அன்று தான் உணர்ந்தான், நிரம்பிய சந்தோஷம் என்றால் என்னவென்று.

இன்னும் மௌனமும், சிரிப்பும் மட்டுமே பேசிக் கொண்டிருந்தன இருவரிடையில். நேரம் ஆனதை உணர்ந்து அவ்விடத்தைப் பிரிந்தும், பிரியாமலும் நகர்ந்தனர் இருவரும்.

அடுத்து எங்கே எனக் கேள்வியே எழவில்லை. ஏற்கனவே பேசிக் கொண்டார்களோ, என்ன செய்யவேண்டும் என்று என எண்ண வைத்தது. பூங்கா விட்டு வெளியேறியவுடன், "கொடை லேக்" நோக்கி நடந்தனர். இருவர் மட்டும் செல்லக் கூடிய படகில் ஏறிக் கொண்டனர். இருவரும் படகை தங்களால் இயன்ற வேகத்துடன் மிதித்துக் கொண்டிருந்தனர். ஏரியின் நடுவே வந்ததும், கால்கள் படகை மிதிக்க மறந்தன. தங்களுக்காய் மீதம் இருக்கும் கணங்கள் அனைத்தும் அங்கேயே கரைந்து விடாதோ என்ற ஏக்கம் இருவர் உள்ளங்களில். முன்னேறிச் செல்ல விருப்பமில்லை. வந்த வழியே திரும்பவும் மனமில்லை. தன் கன்னத்தில் கை வைத்தபடி, எதிரே இருந்த படகில், பள்ளிச் சிறுமியர் போடும் அட்டகாசத்தை ஆர்வமாய் அவள் நோக்குகையில், அவன் பார்வையோ அவள் முகத்தின் மீது மட்டுமே. சட்டென, அவள் அவன் பக்கம் திரும்பினாள். மாட்டிக் கொண்ட கள்வனைப் போல், வேறு பக்கம் பார்த்து முகம் மலர்ந்த தன்னவனைக் கண்ட பெண்ணின் வெட்கத்தை விளக்கவும் வேணுமோ?

கரைக்குத் திரும்பிய உடன், பெரிதும் களைப்புற்றவராய், அன்றைக்கு வாழ்வை முழுதுமாய் வாழ்ந்த மனநிறைவுடன் தாங்கள் தங்கி இருந்த ஹோட்டல் நோக்கி நடை போட ஆரம்பித்தனர்.

ஹோட்டல் அறையினுள் நுழைந்த அவர்களிடம்,

"எங்கே போனீங்க ரெண்டு பேரும்? அம்மா, அப்பா கூட தெரியல னு சொல்லிட்டாங்க. எனக்கு விளையாட ஆளே இல்லை. சரி விடுங்க... வாங்க பார்க் போகலாம் "

என்ற நான்கு வயது பேத்தியை அணைத்தபடி, மீண்டும் நடந்தனர் பிரயன்ட் பார்க் வழியில்.

அவர்கள் வாழ்க்கையில் ஒன்றாய் எதிர்கொண்ட போராட்டங்கள், அனுபவித்த சந்தோஷங்கள், எதிர்பட்ட பிரச்சனைகள், நிறைவேற்றிய கடமைகள் அனைத்தும், அவர்கள் காதலை மெருகேற்றி இருந்தது. அன்று கொண்ட ஆனந்தத்தை விட இன்று மீண்டும் வாழ்ந்த அதே நொடிகள் உண்டாக்கிய நிறைவு மனம் முழுவதும் வாசம் பரப்பியது.

குறையொன்றுமில்லை...

"வாழ்த்துக்கள் ...பெண் குழந்தை " - தாய், தந்தை இருவருக்கும், உள்ளிற்குள் இனம் புரியா ஆனந்தம்."ஆசைக்குப் பொண்ணு " என்று சொல்வதுண்டு. உண்மை தான் போலும். குறையொன்றுமில்லை.

அவள் அம்மாவின் அரவணைப்பில் உலகை நோக்கினாள். அனைத்துமே சுகமாய், அமைதியாய் இருந்தது. அவ்வயதில், நல்லது கெட்டது ஆராயத் தெரியுமா என்ன? வீட்டில் அவளே செல்லம் ஆனாள். குறையொன்றுமில்லை.

பள்ளி முதல் நாள். அப்பா அழைத்துச் சென்று விட்ட பின், வகுப்பிற்குள் தனியாக நுழைந்தாள். உலகத்தை யார் துணையும் இல்லாமல், தனியாக எதிர் கொண்டதாய் ஓர் பெருமிதம். குறையொன்றுமில்லை.

ஒவ்வோர் வகுப்பையும் கடந்து மெல்ல முன்னேற்றம் கொண்டாள். ஏதும் வித்தியாசம் தெரியவில்லை. சீராகவே சென்றது. திடீரென, தனக்குள் ஒரு மாற்றத்தை உணர்ந்தாள். ஆண், பெண் வேறுபாடு இது வரை உணரவில்லை. ஆனால் இப்போது அதுவே கண் முன் இருந்தது. ஏன் அப்படி? கேள்வி தனக்குள் மட்டுமே. தாயிடம் கேட்டால், மௌனமே பதிலாய் வந்தது. ஆம். பெண்மையின் வெளிப்பாடு. திகிலாய் உள்ளே தோன்றினும், அதுவே நிரந்தரம் என்பதால்,பழக்கம் கொண்டாள். குறையொன்றுமில்லை தான்.

மாற்றம், தனக்குள் மட்டுமில்லை. தன்னைக் காணும் உலகத்தின் பார்வையிலும் தான். முன்பு வீட்டில் காட்டிய செல்லம், தற்போது செல்லமாகத் தோன்றவில்லை. தடையாகவே தோன்றியது. தனியாகச் செல்ல அனுமதி இல்லை என்பதைக் காட்டிலும், பாதுகாப்பு இல்லை என்பதே உண்மை. Ruchika போன்ற நிகழ்வுகள் செய்திகளில் வருகிறதே. தன் வயதை ஒத்த ஆண் பிள்ளைகள் இவ்விதக் குழப்பம் கொள்ளவில்லையே. கடவுளே
இதற்கு வித்திட்டாரோ? உலகம் தோண்றிய காலம் முதல் இப்படித் தான் போலும். அவ்விதமே அவளைச் சுற்றி இருந்த சமூகம் நம்ப வைத்தது. ஏற்றுக் கொண்டாள். இதைக் காரணமாய்க் கொண்டு, மனதில் நினைப்பதைச் செய்ய, அனுபவிக்க, ஐயம் கொண்டாள். பெண் என்றால் செய்யக் கூடியது , செய்யக் கூடாதது என இருக்கின்றன போலும். வாழ்க்கையில் மேலும் நிறைய உள்ளது. இதைத் தவரவிடின் குடி மூழ்கிப் போவதில்லை என சமாதானம் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

தன் பெயருக்குப் பின்னால், பட்டம் பெற்றாள். ஆணிற்குப் பெண் சமம் உண்மையாகி விட்டது. தானும் வேலைக்குச் செல்கிறோம் என்ற மகிழ்ச்சி. தன்னம்பிக்கையுடன் இருக்கிறோம். மேலே இருந்த
அத்துணை குழப்பங்களும் தொடர்ந்தன தான். ஆனால், இவ்வொரு விஷயமே அனைத்தையும் ஆட்கொண்டன.அட. சமூகம் அப்படித் தான்..குறை ஒன்றுமில்லை


திருமண வயது. அப்பப்பா... எவ்வளவு ஆசையுடன் செய்கிறார்கள் பெற்றோர். எவ்வளவு நகை, சாமான், ஆரவாரம். அனைத்தும் தன் மேல் கொண்ட பாசத்தினால் தானே.
உற்சாகம் கொள்ளும் அதே நேரத்தில், கேள்விகளும் அதிகரித்ததே தவிர, குறையவில்லை. ஏன் இவ்வளவு ஆடம்பரமும் மணமகள் வீட்டார் மட்டும் செய்ய வேண்டும்? என்ன பயன்? ஏன் நான் என் வீட்டாரை விட்டுச் செல்ல வேண்டும்? நான் விற்கப் படுகிறேனா? அல்ல, மாப்பிள்ளை வாங்கப் படுகிறாரா? ஏன் இது இப்படியாக இருக்கிறது? புரியவில்லை தான். கேள்விகள், அவளைத் தாண்டி நகர்ந்தால், பதில் "அது அப்படித் தான்" . ஒத்துக் கொண்டாள். அட. சமூகம் அப்படித் தான் மா...குறையொன்றுமில்லை.

புகுந்த வீடு சென்ற பின், அவளும் வேலைக்குச் சென்றாள். அவள் கணவனும் சென்றான். ஆயினும்,
வீட்டு வேலை செய்வது, அவளாகவே இருந்தது. ஏன்? சமூகமே அப்படித் தான். சரி தான். அப்படியானால், அதைத் தவிர , குறையொன்றுமில்லை.


பெண் வாழ்கையின் தவப்பலன். தாயானாள். சுற்றம் முழுவதும் அவளைக் கொண்டாடியது. தாங்க மாட்டா வலி கொண்டாள். இறந்து விடுவோமோ என அஞ்சும் அளவு வலி, துக்கம். குழந்தை பிறந்தது. பிறந்த பலனை அடைந்து விட்டாயிற்று. இது வரை மனதில் எழுந்த கேள்விகள் எல்லாம் நொடிப் பொழுதில் மறைந்தன. இந்த ஒரு தாய்மை
உணர்விற்காகத் தான், இத்தனை தடைகளுமா அவளுக்கு? இதை அறிந்து தான், சமூகம் இவ்வளவு கோட்பாடுகளை வைத்துள்ளதா? அப்படியானால், குறையொன்றுமில்லை.

மீண்டும் அவள் பணி - வீட்டிலும், அலுவலகத்திலும் தொடர்ந்தது. குழந்தையை வளர்க்கும் பொறுப்பும் உடன் சேர்ந்தது. தற்போது, இரண்டு வித வாழ்க்கை அவள் முன். அவை இரண்டில், ஒன்றை தேர்வு செய்ய அவளுக்கு சுதந்திரம் இருந்தது. ஒன்று, வேலையை விட்டு, வீட்டில் இருந்து அனைத்தையும் கவனிக்க வேண்டும். இல்லையேல், வீடு, அலுவல் என இரண்டையும் சமாளிக்க வேண்டும். அச்சோ. இரண்டிலுமே, வீட்டை கவனிக்கும் பொறுப்பு பெண்ணிற்குத் தானா? குழந்தை வளர்ப்பில் பெண் மட்டும் தான் ஈடுபட வேண்டுமா? அது ஏன்? பெண்ணால் மட்டுமே பொறுப்பாய், பாச மிகுதியாய் இருக்க முடியும். உண்மை தான் போலும். சமூகம் கூறினால், உண்மையாகவே இருக்க வேண்டும். இப்போதும் குறை ஒன்றும் இல்லை.

அவள் மனதினுள் அவள் காணும் வெளி உலகத்திற்காய் , அவள் ஆசைப்பட்டவை என ஏதேனும் செய்ய நினைத்தால், நேரம் அவளுக்கு ஒத்துழைக்கவில்லை. சமூகம் அதை ஒரு பொருட்டாய்க் கொள்ளவில்லை. அவளும் தான். ஆகையால், குறை ஏதும் உள்ளதென நினைக்கவில்லை.

சுமங்கலியாய் சென்று விட வேண்டும் என அனைவரும் சொல்லி கேள்வி பட்டிருக்கிறாள். உணர்ந்தாள், கணவர் சென்ற பின். கணவர் வருவதற்கு முன்னமே, பூ, பொட்டு எல்லாம் வைத்திருந்தாள் . ஆயினும், இப்போது அது அவளிடம் இருக்கக் கூடாது என சுற்றம் கூறியது. எதிர் கேள்வி கேட்க மனம் இல்லை. அவள் இருப்பதையே, அமங்கலமாய்க் கருதியது. இது ஏன் பெண்ணிற்கு மட்டும் இப்படி? சும்மா இரு. சமூகம் அப்படித் தான். குறை ஒன்றும் இருக்கக் கூடாது.


இவை அனைத்தும் இருப்பினும், அவளிடம் சமூகம் கூறியது "இனிய மகளிர் தினம் " .

அது சரி. சமூகம் என்பது யாரானால் ஆனது? தானும் தானே என்பதை உணரும் சமயம், வாழ்க்கை அவள் கையில் இல்லை.

வெற்றிடம்

"டேய்... நேத்து ஸ்கூல் சீக்கரமே முடிஞ்சிதா? வீட்டுக்குப் போனதுக்கு அப்புறம் என்ன பண்றது நு தெரியாம பக்கத்துல இருந்த மைதானத்துக்கு போலாம் னு தோணிச்சு. அம்மா கிட்ட சொன்னேன். அம்மாவும் சரி னு சொல்லிட்டாங்க. எனக்கு சந்தோஷத்துக்கு அளவே இல்ல டா"

"போனியா?"

"ஆமாம். போனோமே. அங்க குட்டி பசங்க விளையாட நிறைய இருக்கு. அம்மா கைய பிடிச்சி போனேன். சறுக்கு மரம் மட்டுமே நிறைய கலர் ல இருந்துது. எல்லாமே ஒரே மாதிரி தான். ஆனா எல்லாத்துலயும் மாறி மாறி குதிச்சிட்டு இருந்தேன். "

"சறுக்கு மரம் மட்டும் தானா? வேற எதுவும் இல்லையா அங்க?"

"ஏன் இல்ல? ஊஞ்சல் இருந்துது. அதுல நான் ஏறி உக்காந்தேன். அம்மாக்கு அத பாத்து ரொம்ப சந்தோஷம். பின்னாடி நின்னு, ஒவ்வொரு வாட்டியும் நான் மேல போய்ட்டு திரும்ப கீழ வரும் போது, பொறுமையா திரும்ப ஏத்தி விட்டாங்க. செம ஸ்பீடா தள்ளி விட்டாங்க. எனக்கு காத்துல மிதக்கறா மாதிரியே இருந்துது. "

"வேற என்ன விளையாடின? நீ சொல்ல சொல்ல எனக்கும் அப்டி எல்லாம் விளையாடனும் னு ஆசையா இருக்கு டா. ஆனா எப்போ, யார் கூட்டிட்டு போவாங்க னு தெரியலையே. நானும் எங்க அம்மா வ கேட்டு பாக்கறேன் ஒரு வாட்டி "

"சீசா இருந்துது டா. அதுவும் சூப்பர் தெரியுமா? நான் ஒரு பக்கம் உக்கார, அம்மா இன்னொரு பக்கம், கைய வெச்சி பேலன்ஸ் பண்ணாங்க... அது விளையாடும் போது, பக்கத்துல ஒரு தாத்தா "பலூன் பலூன்" னு கூவிட்டே போனாரு. அத பாத்த உடனே, விளையாட பிடிக்கல. பலூன் வாங்கணும் னு தோணிச்சு. அம்மா வ பாக்க மட்டும் தான் செஞ்சேன். வாய தெறந்து கேக்கவே இல்ல. அம்மா உடனே தாத்தா வ கூப்பிட்டு பலூன் வாங்கி தந்தாங்க. "

"என்ன கலர் பலூன்? எவ்ளோ பெரிசு?"

"ப்ளூ கலர். செம பெரிசு. அத தூக்கி போட்டு விளையாட ஆரம்பிச்சிட்டேன். "

" பலூன் தாத்தா முகம் ஞாபகம் இருக்கா?"

"இருக்கே. "

"பலூன் கலர் ஞாபகம் இருக்கு. தாத்தா முகம் ஞாபகம் இருக்கு. என்ன விளையாடின னு எல்லாம் ஞாபகம் இருக்கு. ஆனா, உன்னை இங்க ஆசிரமம் ல விட்டுட்டுப் போன உங்க அம்மா முகம் மட்டும் எப்படி இருந்துது னு ஞாபகம் இல்லையா?"

"என்னை கேக்கற? நீயும் தான் அடிக்கடி உங்க அம்மா வ பாக்கற? முகம் ஞாபகம் இருக்கா என்ன? "

"அது சரி டா. நாம எல்லாத்தையும் கனவுலேயே பாக்கறோம். என்னிக்கு தான் நேர்ல பாத்து விளையாட போறோமோ. "

இருவரும் மற்றும் ஓர் கனவை எதிர்பார்த்து உறங்க முயற்சித்தனர்.