Thursday, October 27, 2011

புன்னகைப் பூவே

கடவுளை என்றாவது யாராவது உணர்ந்ததுண்டா? இருக்கிறாரா இல்லையா என்ற விவாதம் தொடர்ந்து கொண்டே இருக்கும்! முடியக் கூடியதும் இல்லை. சுற்றி நடக்கும், அநியாயங்களும், உளைச்சல்களும் கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வியையும், மழை,கடல்,இயற்கை என அனைத்தும் எல்லையை மீறிய ஒரு சக்தியையும் மாறி மாறி உணர்த்திக் கொண்டே இருக்கும்!

அது ஒரு புறம் இருப்பினும், கடவுளை உணர்ந்த நொடிகள் என்று பல உண்டு. ஒரு புன்னகை, சிறு துளி கண்ணீர், முகமலர்ச்சி, கோபம்,நன்றி,மன்னிப்பு என பலவற்றை தினமும் எதிர்கொண்டு தான் இருக்கிறோம். ஆனால் என்றாவது ஒரு நாள் மட்டும், அதே புன்னகை,கண்ணீர் மனதில் மாற்றத்தை உண்டு பண்ணலாம்! அத்தகைய மனதிற்கு நெருக்கமான தருணங்களை என்னவென்று விவரிப்பது!

அன்று, மிகுந்த குழப்பமான மனநிலையில் சாலையில் நடந்து கொண்டிருந்தேன். ப்ளேயரில் இளையராஜா பாடிக் கொண்டிருந்தாலும், மனக்குழப்பத்தில் மட்டும் மாற்றமில்லை! எங்கே நடக்கிறோம் என்ற உணர்வு கூட இல்லை!

திடீரென எதிரே முதுகில் பையை மாட்டிக் கொண்டு ஒரு சிறு பெண் வழி மறித்து நின்றாள். கையை சல்யுட் போல நெற்றியில் வைத்தவாறே, "அக்கா. எங்க பாத்து நடக்கறீங்க? குட் ஈவினீங்" என்றாள் முகம் நிறைய புன்னகையுடன்! என்னிடம் தான் பேசுகிறாளா? இவளை முன்னமே பார்த்திருக்கிறேனா? எதற்கு என்னை நிறுத்தினாள்? ஏன் என்னிடம், அவள் பேசினாள்? தினம் செல்லும் வழி தானே. கபடமில்லா சிரிப்பும், குட் ஈவினிங் வாழ்த்தும் ஏன் என் மீது அன்று வீசுகிறாள் ? அந்த புன்னகை, என் இதய ஆழமுள் வரை சென்று,ஏன் உற்சாகத்தை பரப்பியது? பதிலுக்கு கூட அவள் காத்திருக்கவில்லை.நகர்ந்து நடந்து கொண்டே இருந்தாள். சில கணங்கள் என்ன பதில் அளிக்க வேண்டும் என்று அறியாமல் அங்கேயே நின்ற நான், திரும்பி "ஓய். குட் ஈவினிங்" என்றேன் கை அசைத்தவாறு. புன்னகை மட்டுமே பதில் அளித்து மறைந்தாள் இருட்டில்!

அவள் முகம் எனக்கு இப்போது நினைவில் இல்லை. புன்னகை தந்த நொடிகள் மட்டும் நிறைந்திருக்கிறது நினைவுகளில். இந்த தருணம் என்ன உணர்த்தியது எனக்கு? அன்பு தான் கடவுளா? அன்பின் வழியே கடவுள் வெளிப்படுகிறாரா? ஒரு சிறு புன்னகை கூட மனதை இப்படி மாற்றுவதன் அதிசயமும் ரகசியமும் என்ன! அனைத்து கேள்விகளும் எழுந்தாலும், பதில் தேவையிருக்கவில்லை! நான் தான் மீண்டும் புதியதாய் பிறந்தது போல், பாடிக் கொண்டு நடந்தேனே தொடர்ந்து! எதுவாக இருந்தாலும் சமாளிக்கலாம் என்ற தெளிவு பிறந்தது ஆச்சரியமே! நீங்களும் இத்தகைய மனதை விட்டு அகலா தருணங்கள் வாழ்ந்துள்ளீர்கள் தானே!

5 comments:

  1. நிஜம் தான் . அருமையான பதிவு.- ஜீவன்

    ReplyDelete
  2. nice one.சில திருத்தங்கள் செய்தால் இன்னும் அழகான-சிறுகதை ஆகியிருக்கும்.

    ReplyDelete
  3. @jeevan நன்றி :)
    @karki என்ன சிரிப்பு? :)
    @jroldmonk :) நன்றி. அடுத்த முறை, வேற பதிவு சிறுகதையா போட்டுடலாம் :)

    ReplyDelete
  4. hii.. Nice Post

    Thanks for sharing

    For latest stills videos visit ..

    www.ChiCha.in

    www.ChiCha.in

    ReplyDelete